Monday, January 16, 2012

The Legend Of Syamantaka

சியமந்தக மணி



என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி:

"விநாயக சதுர்த்தி விருதம் இருப்பவர்கள் சந்திர தரிசனம் செய்யக்கூடாது கூடாது, அப்படி சந்திரனைப் பார்த்தால் துன்பம் தொடரும் என்கின்றனர், இஇது எவ்வளவு தூரம் உண்மை?"

என்னுடைய பதில்:

கேள்வியில் ஒன்றும் தவறேயில்லை.
வளர்பிறைச் சதுர்த்தியின் பிறையைப்பார்க்கக்கூடாது என்று ஐதிகம்.
பார்த்தால் ஏதாவது வீண் அபவாதம் ஏற்படும் என்பார்கள்.
பெரிய மஹாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் அதற்கு விளக்கம் கொடுக்கும்வண்ணம் ஒரு கதை காணப்படும். 'சியமந்தக மணி கதை' என்பார்கள்
கிருஷ்ணர் அதனைப் பார்த்ததால் சியமந்தகமணி சம்பந்தமாக வீண் அபவாதத்துக்கு ஆளாக நேரிட்டது என்று சொல்வார்கள்.
சியமந்தக மணி என்பது சுபிட்சத்தைக்கொடுக்கும் ஒரு மணி.
மணி என்றதும் ஏதோ bell சமாசாரமாக்கும் என்று எண்ணிவிடத் தோன்றும்.
அப்படியெல்லாம் இல்லை. அது ஒரு crystal போன்றது.
அந்த மணியை சத்ராஜித் என்னும் யாதவகுல மன்னன் சூரியனிடமிருந்து பெற்றான். அவன்தான் பாமாவின் தந்தை. கிருஷ்ணருடைய இரண்டாவது மனைவி பாமா எனப்படும் சத்திய பாமா.
அவனிடம் சியமந்தக மணி இருப்பதைக் கண்ட கிருஷ்ணர் அதனை மிகவும் வியந்து பாராட்டி விசாரித்தார்.
கிருஷ்ணருக்கு சியமந்தகமணிமேல் ஆசையேற்பட்டதால் இப்படிக் கேட்கிறாரோ என்று அவன் நினைத்துவிட்டான். அவன் நிம்மதியை இழந்துவிட்டான். மணியை வைத்திருக்கவும் ஆசை;
வைத்திருக்க அச்சமும் ஏற்பட்டுவிட்டது.
ஆகவே அந்த மணியைத் தன் தம்பியாகிய பிரசேனனிடம் கொடுத்துவிட்டான். அவன் தன்னுடைய கழுத்தில் அதனைத் தொங்கவிட்டுக்கொண்டான்.
ஒருமுறை அவனும் கிருஷ்ணரும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றிருந்தபோது ஒரு சிங்கம் அவனைக் கொன்றுவிட்டு, அந்த சியமந்தக மணியை எடுத்துச்சென்றுவிட்டது .
பிரசேனனைக் கிருஷ்ணர் தேடினார். இருட்டிக்கொண்டிருந்தது.
அப்§ பாது அவர் ஆகாயத்தைப் பார்த்தார். அங்கே நாலாம்பிறை தெரிந்தது. அதனை அவர் பார்த்துவிட்டார்.
பின்னர் அவருடைய நகரமாகிய துவாரகைக்குத் திரும்பினார்.
பிரசேனன் திரும்பி வராததை அறிந்த சத்ராஜித் கிருஷ்ணர் பேரில் சந்தேகம் கொண்டான்.
பிரசேனனைக் கிருஷ்ணர்தான் கொன்றுவிட்டு சியமந்தக மணியை அபகரித்துக்கொண்டுவிட்டார் என்று சத்ராஜித் குற்றம்சாட்டினான். இதனை அனைவருமே நம்பினார்கள்.
கிருஷ்ணருக்கு வீண் அபவாதமும் பழியும் ஏற்பட்டன.
ஆகவே தாம் நிரபராதி என்பதை நிரூபிக்கவேண்டி, கிருஷ்ணர் அந்த மணியைத் தேடிச் சென்றார்.
அந்தக் காட்டுக்குத் திரும்பிச்சென்றார்.
அந்தக் காட்டில் ஒரு குகையில் கரடிகளுக்கெல்லாம் ராஜாவாகிய ஜாம்பவான் இருந்தார். அவர் பிரம்மாவின் அம்சமாக கிரேதாயுகத்தில் பிறந்தவர். இராம ராவண யுத்தத்திற்காக அவதரித்தவர்.
இராமருடன் நெருங்கிப் பழகியவர்.
அவர் ஒரு சிரஞ்சீவி. இறப்பில்லாதவர். அவர் அந்த சிங்கத்தைக் கொன்றுவிட்டு சியமந்தக மணியை எடுத்துச் சென்று தன்னுடய குழந்தையிடம் கொடுத்தார்.
காட்டில் சிங்கம் பிரசேனனைக் கொன்ற தடத்தைக் கிருஷ்ணர் பார்த்து விட்டார். பக்கத்தில் பெருங்கரடியின் பாதச்சுவடு தெரிந்தது. தொடர்ந்து தேடிச் செல்கையில் ஜாம்பவானின் குகைக்கு வந்துவிட்டார்.
அவர் உள்ளே சென்று பார்க்கும்போது ஜம்பவானின் மகள் தன்னுடைய தம்பியைத் தாலாட்டிக் கொண்டிருந்தாள்.
அவள் ஒரு பேரழகி. அவளுக்கு நுண்ணுணர்வு உண்டு. அதன்மூலம் கிருஷணர் அங்கு வந்திருப்பதை அறிந்துகொண்டாள்.
எதற்காக வந்திருக்கிறார் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

பிள்ளையைத் தாலாட்டுவதற்காக ஒரு சுலோகத்தை ராகம் போட்டுச் சொன்னாள்.

ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத:
ஸ¤குமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:

"சிங்கம் பிரசேனனைக் கொன்றுவிட்டது.
சிங்கமோ ஜாம்பவானால் கொல்லப்பட்டுவிட்டது.
நல்ல குழந்தையே! அழாதே. ஸ்யமந்தக மணி உனக்குத்தான்,"
இவ்வாறு அவள் குறிப்பாகக் கிருஷ்ணருக்கு அறிவித்தாள்.
அதன்மூலம் கிருஷ்ணருக்கு சியமந்தகமணி இருக்குமிடம் தெரிந்துவிட்டது.
அதனைப் பெறுவதற்காக ஜாம்பவானுடன் போரிட்டார்.
மல்யுத்தம்தான். இருவரும் கட்டிப் புரண்ட போதெல்லாம் ஜாம்பவானுக்கு ஏதோ ஒரு பழைய ஞாபகம் வந்தது. அந்த ஆலிங்கனம் என்னும் கட்டிப்பிடிப்பு எங்கோ எப்போதோ பரிச்சயமானதுபோல் தோன்றியது..
யோசிக்கும்போது அது இராமர் தம்மைத் தழுவிக் கொண்டபோது ஏற்பட்ட அதே உணர்ச்சியாகத் தோன்றியது. அப்போது அவர் போரை நிறுத்திவிட்டு உற்றுப் பார்க்கும்போது கிருஷ்ணர் இராமராக அவர் கண்களுக்குத் தோற்றமளித்தார்.
யுகத்தையும் தாண்டி அவதாரத்தையும் தாண்டி நின்ற நுண்ணுணர்வே வென்றது.
தம் தலைவனை மீண்டும் கண்டுகொண்டார் ஜாம்பவான்.
கிருஷ்ணரிடம் சியமந்தமணியையும் தந்து அவருக்குத் தம்முடைய மகளாகிய ஜாம்பவதியையும் திருமணம் செய்துகொடுத்து அனுப்பிவைத்தார்.

சியமந்தகமணியைக் கிருஷ்ணர் சத்ராஜித்திடம் திருப்பிக் கொடுத்தார்.
அவனுக்குக் குற்ற உணர்வும் மனசாட்சியும் உறுத்தின.
நிரபராதியான கிருஷ்ணரை அபவாதத்துக்கு ஆளாக்கியதுதான் காரணம்.
அதற்குப் பிராயச்சித்தமாகத் தன்னுடைய மகள் பாமாவைக் கிருஷ்ணருக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டான்.
ஆனால் பாமாவைத் திருமணம் செய்துகொள்ள ஏற்கனவே மூன்று பேர் முயன்றுகொண்டிருந்தனர். அவர்கள் ஆத்திரம்கொண்டனர்.
கிருஷ்ணர் ஹஸ்தினாபுரத்துக்குச் சென்றிருந்த சமயமாகப் பார்த்து அவர்களில் ஒருவனாகிய சததன்வா சத்ராஜித்தைக் கொன்றுவிட்டு சியமந்தக மணியையும் கைப்பற்றிக்கொண்டான்.
கிருஷ்ணர் திரும்பியபின்னர் சததன்வா பயந்துபோய் துவாரகையைவிட்டு ஓடிவிட்டான். அவன் ஓடும்போது போட்டியாளர்கள் மூவருள் ஒருவரான அக்ரூரர் என்பவரிடத்தில் மணியைக் கொடுத்துவிட்டு ஓடினான். கிருஷ்ணர் தம் அண்ணன் பலராமருடன் அவனை விரட்டிச் சென்று கொன்றுவிட்டார். ஆனால் அவனிடம் சியமந்தக மணி இல்லை.
வெறுங்கையோடு பலராமரிடம் திரும்பினார். ஆனால் கிருஷ்ணர்தான் சியமந்தகமணியை எங்கோ மறைத்துவைத்துக்கொண்டு பொய்சொல்வதாக பலராமர் நம்பி, கிருஷ்ணரைக் குற்றம் சாட்டினார். அக்ரூரரோ காசிக்குச் சென்றுவிட்டார்.
சியமந்தக மணியால் ஏற்பட்ட துயரங்களையெல்லாம் நினைத்து நினைத்து கிருஷ்ணர் மனவருத்தப் பட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது வந்த நாரதரிடம் சொன்னபோது, அவர் நாலாம்பிறையைப் பார்த்ததால் வந்த வினை என்று சொன்னார்.
அதனை அறிந்த கிருஷ்ணர் விநாயகருக்காகச் சதுர்த்தி பூஜையைச் செய்தார். விநாயகர் வந்து அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார்.
விரைவிலேயே துவாரகையில் பஞ்சம் ஏற்பட்டது.
ஆனால் அந்தச் சமயத்தில் அக்ரூரரின் வீட்டில் மட்டும் சுபிட்சமாக இருந்தது. சியமந்தகமணி எங்கே இருக்கிறதோ அங்கு சுபிட்சம் இருக்குமல்லவா? அதுவே தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது.
ஆகவே கிருஷ்ணர் அக்ரூரரைக் காசியிலிருந்து தயவாகவும் நயமாகவும் செய்திசொல்லி அனுப்பி வரவழைத்தார். திரும்பிவந்த அக்ரூரர் மணியைக் கிருஷ்ணரிடம் கொடுக்கமுயன்றும் கிருஷ்ணர் அதனை அக்ரூரரே வைத்துக்கொள்ளுமாறு செய்துவிட்டார்.
கிருஷ்ணரின்மீதிருந்த அபவாதம் முற்றாக நீங்கிற்று.
எந்த நாலாம்பிறையை ஏன் பார்க்கக்கூடாது, எதனைப் பார்த்துப் பூஜை செய்யவேண்டும் என்ற விபரம் பின்பு......

அமாவாசைக்கு அடுத்து வரும் நாலாம் பிறையைப் பார்க்கக்கூடாது என்ற சாபத்தை சந்திரனுக்கு விநாயகர் கொடுத்தார்.
சந்திரனுக்குத் தன்னுடைய அழகைக்கொண்டு கர்வம்.
ஒருமுறை விநாயகர் தம் எலி ஊர்தியில் வருவதைக்கண்டு கேலியாகச் சிரித்ததால் 'சந்திரனைப் பார்த்தவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படட்டும்' என்று விநாயகர் சாபமிட்டார்.
இதனால் மனம் வருந்திய சந்திரன் கடலுக்குள்போய் ஒளிந்து கொண்டு விட்டான். அதனால் ஏற்பட்ட கஷ்டங்களைக் கண்ட தேவர்கள் ரிஷிகள் அனைவருமாக விநாயகரின் கோபம் தணிவதற்கு விரதமிருந்து பூஜை செய்துவிட்டு, சந்திரனைக் கண்டு விநாயகரிடம் மன்னிப்புக் கோரச்
சொன்னார்கள்.
அதன்படியே சந்திரனும் விக்னேஸ்வரைப் பூசித்தான்.
மனம் குளிர்ந்த விநாயகர் தம்முடைய சாபத்தின் அளவைக் குறைத்து ஒரு மாதத்தில் ஒருநாள்மட்டுமே- வளர்பிறைச் சதுர்த்தியின் பிறையைப் பார்க்கக்கூடாது என்று ஏற்படுதினார். அத்துடன் சந்திரனைத் தன் முடியிலும் சூட்டிக்கொண்டார். நெற்றியிலும் வைத்துக்கொண்டார்.
'பாலச்சந்திரன்' என்ற பெயரும் இதனால் விநாயகருக்கு ஏற்பட்டது. பாலத்தில் - நெற்றியில் சந்திரனை அணிந்தவன் என்று பொருள்.
இதுமட்டுமின்றி இன்னொரு வரத்தையும் பெருமையையும் சந்திரனுக்கு விநாயகர் தந்தார்.
'பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறையின் நாலாம்நாள் - சதுர்த்தியன்று தமக்காக விரதமிருந்து பூசை செய்துவிட்டு, இரவில் நாலாம்பிறைச் சந்திரன் உதிக்கும்போது, சந்திரதரிசனம் செய்துவிட்டு, சந்திரனையும் பூசித்துவிட்டு, விரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும்' என்று ஏற்படுத்தினார்.
அந்த விரதம் சங்கடங்கள் நீங்குவதற்காக அனுஷ்டிப்பது. சங்கடங்களை நீக்குபவர் சங்கடஹர கணபதி.
அவருக்காக ஏற்பட்ட விரதத்தை அன்று அனுஷ்டிப்பதால் அந்த நாளுக்கு 'சங்கடஹர சதுர்த்தி' என்று பெயர் ஏற்பட்டது.
சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டைப் பற்றி ஏற்கனவே எழுதி வலைத்தளத்தில் போட்டு வைத்திருக்கிறோம்.

வீண் அபவாதம் நீங்குவதற்காகச் செய்யவேண்டிய பிராயச்சித்தமாக சியமந்தக மணி கதையைப் படிப்பார்கள்; அல்லது படிக்கச் சொல்லிக் கேட்பார்கள்.
அதனிலும் எளிதாக ஒரு வழியையும் சொல்லியிருக்கிறார்கள்.
அந்தக் கதையில் கிருஷ்ணருக்கு ஜாம்பவதி குறிப்பாக உணர்த்திய தாலாட்டுப் பாடலை ஜபமாகச் சொல்லச் சொல்லியிருக்கிறார்கள்.

ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத:
ஸ¤குமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:

விநாயகரை விக்னநாசனனாக வழிபடுவதற்கென்று தனிப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன.
'விக்னேஸ்வ சோடச நாமம்' என்று பெயர் பெற்றவை.
சங்கடங்களை நீக்குவதற்கென்று சங்கடஹர கணபதி.
அதுபோலவே விக்னங்களை நிக்குவதற்கு விக்னநாசனன் அல்லது விக்னஹரன்.
விக்னநாசன கணபதி சோடச நாமங்களைத் தனித்தனியாகவும் சொல்லலாம். பதினாறையும் ஒரே மந்திர சுலோக தோத்திரமாகவும் சொல்லலாம்.

ஸ¤முகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்ய§க்ஷ¡ பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:

இதனையே நாமாவளியாக:

ஸ¤முகாய நம:
ஏகதந்தாய நம:
கபிலாய நம:
கஜகர்ணகாய நம
லம்போதரய நம
விகடாய நம
விக்நராஜாய நம
விநாயகாய நம
தூமகேதவே நம
கணாத்யக்ஷ¡ய நம
பாலச்சந்த்ராய நம
கஜானனாய நம
வக்ரதுண்டாய நம
சூர்ப்பகர்ணாய நம
ஹேரம்பாய நம
ஸ்கந்தபூர்வஜாய நம

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Kurinji

பிரான்மலையில் நான் செய்த குறிஞ்சி மலர்க் கண்டுபிடிப்பு

"தமிழர்கள் முக்கியமாகக் கருதிய மலர்கள் சில இருந்தன. அவற்றில் குறிஞ்சி மலரும் ஒன்று.
தமிழர்கள், அவர்கள் வாழ்ந்த பூமியை ஐந்து வேறுபட்ட நிலப்பகுப்புக்களாகப் பிரித்திருந்தனர். மலையும் மலைசார்ந்த நிலத்தைக் குறிஞ்சி என்று அழைத்தனர். கடல் சார்ந்த நிலம் நெய்தல், வயலும் வயல் சார்ந்த நிலத்தை மருதம், காடும் காடு சார்ந்த இடம் முல்லை நிலம். இந்த நிலங்கள் தத்தம் லட்சணங்களை இழந்து பிறழ்ந்துபோகும்போது ஏற்படும் நிலத்தைப் பாலை
என்பார்கள்.
இவற்றை ஐந்திணைகள் என்று இலக்கணம் கூறும்.
இவை ஒவ்வொன்றும் அந்த நிலங்களுக்குரிய மலர் ஒன்றின் பெயரால் குறிப்பிடப் படுகின்றன.
இவற்றில் மிகவும் இனிய சூழலைக் கொண்டதாக விளங்கியது குறிஞ்சியே.
அந்த நிலத்துக்குரிய மலர் குறிஞ்சி மலர் என்று அடையாளம் கண்டிருந்தனர்.
குறிஞ்சி மலர் குறிப்பிட்ட உயரமுள்ள சில இடங்களில் குளிர்ந்த சூழலில்மட்டுமே வளரும். அதற்கேற்ற நீர்ப்பிடிப்பும் இருக்கவேண்டும். பெரும்பாலும் மலைச்சாரலில் இது வளரும். ஆனால் மலைச்சாரலிலும் அது எல்லா இடங்களிலும் வளர்ந்துவிடமாட்டாது. மலைகளின் சில சரிவுகளில் வெயில் அதிகம் படமாட்டாது.  ஒரு நாளில் ஓரிரு மணிநேரமே நேரடியான வெயில் அங்கு விழும். மற்ற சமயங்களில் ஏதாவது மலையோ பாறையோ சூரியனை மறைத்து நிழல் சூழ்ந்திருக்கும்.
அந்த மாதிரியான இடங்களில், குளுமை அதிகமாக இருக்கும் இடங்களில்தான் குறிஞ்சி இருக்கும்.
உலகில் கிட்டத்தட்ட இருநூறு வகையான குறிஞ்சி வகைகள் உண்டு.
நான் பார்த்த குறிஞ்சி மலர் இண்டிகோ, கத்திரிப்பூக் கலர் என்று சொல்லப்படக்கூடிய
ஒருவகைப் பர்ப்பல் வண்ணத்தில் இருந்தது. இந்த வண்ணத்தை ஒட்டிய வண்ணங்களில் அதனைக் காணலாம்.
குறிஞ்சி பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் எல்லா வகையான குறிஞ்சியுமே பன்னிரண்டு ஆண்டுகள் பார்த்து மணி அடித்து, அலாரம் வைத்துக் கொண்டு பூப்பதில்லை. ஏழாண்டுகளுக்கு ஒருமுறை பூப்பனவும் உண்டு.
ஆனால் பெரும்பான்மையானவை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். அப்படிப் பூக்கக்கூடிய குறிஞ்சியை 'மாமாங்கப்பூ'  என்று சொல்வார்கள். சூரியனை வியாழ கிரகம் ஒருமுறை சுற்றிவரும் காலகட்டம் ஒரு 'மாமாங்கம்' எனப்படும் பன்னிரெண்டு ஆண்டுகள்.
ஏதோ ஒரு மர்மமான முறையில் வியாழனின் வட்டத்தோடு குறிஞ்சி தொடர்பு கொண்டுள்ளது. இந்த மாதிரியான தொடர்பை biological clock என்றும் Biorythm என்றும் சொல்வார்கள்.
இது ஒரு விசேஷமான துறை. விடியும் முன்னர் மலர்பவை, விடியும்போது மலர்பவை, சூரியனைக் கண்டு மலர்பவை என்றும் சூரியன் மறையும் போதும் நள்ளிரவிலும் மலர்பவை என்றும் பல மலர்களுக்கு மலர்வதற்குக் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது.
மலர்கள் மலர்வதை வைத்து இன்ன நேரம் என்று பல இனங்களில் நேரத்தைக் கணிப்பார்கள். இதை Flower Clock என்றும் குறிப்பிடுவார்கள். Carolus Linneus என்னும் விஞ்ஞானி இதைப் பற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்.
இதனைக் Chronobiology என்றும் சொல்வார்கள்.
வானில் இயங்கும் கிரகங்களின் போக்குக்கும் உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றின் இயக்கத்திற்கும் இருக்கக்கூடிய தொடர்பு இது.
Biorhythm தொடர்பை பல ஜீவராசிகளிடமும் பார்க்கமுடியும்.
நான் பார்த்த பூ, கிட்டத்தட்ட இரண்டரை செண்டிமீட்டர் நீளமும் இரண்டு செண்டிமீட்டர் அகலமும் கொண்டதாக, டிரம்ப்பெட் என்னும் கருவியையைப் போன்று நீண்டு, வெளிப்புறமாக விரிந்து மிக அழகாக விளங்கியது. அதற்குளிருந்து நீளமாக மெல்லிய மகரந்த நாக்குகள் நீட்டிக் கொண்டிருந்தன.

தமிழர்கள் ஊட்டியில்தான் குறிஞ்சி மலர் உள்ளது என்றும் அங்குதான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது மலர்கிறது என்றும் நம்பினார்கள்.
ஆனால் அங்கு மட்டுமல்ல.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான்மலை என்னும் மலையிலும் குறிஞ்சி மலர் உண்டு.
அதுவும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைப் பூக்கும் என்பதை நான் கண்டுபிடித்து வெளியுலகத்துக்கு அறிவித்தேன்.
பிரான்மலை என்பது கிழக்குத் தொடச்சி மலையிலிருந்து கிழக்கே நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய சிறிய மலத்தொடர்களில் சிறியதாக விளங்கும் தொடரில் கிழக்குக் கோடியில் இருக்கும்
மலை. அது ஒரு பெரிய பாறையால் ஆகியது. அதன் பல பகுதிகள் பல காரணங்களால் உடைந்து  சிறிய பெரிய பாறைகளாகவும் குன்றுகளாகவும் தோன்றும்.
அதன் அடிவாரத்தில் பிரான்மலை என்னும் ஊர் இருக்கிறது. இது மதுரைக்கு வட கிழக்கே முப்பது கீலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சிறிய ஊர்தான். ஆனால் தமிழ்நாட்டின் மிகப் பழைமையான இடங்களில் ஒன்று.
சங்ககாலத்தில் இது பறம்புமலை என்று அழைக்கப்பட்டது. அது சார்ந்த நாட்டுப் பிரிவு பறம்புநாடு என்று அழைக்கப்பட்டது. வேளிர்கள் ஆட்சியில் இருந்த நாடு. பாரி வள்ளலின் தலைநகரம்.
ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது திருக்கொடுங்குன்றம் என்று அழைக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடப்பட்டு விளங்கியது. திருக்கொடுங்குன்ற ஈஸ்வரர் கோயிலும் நல்லமங்கைபாகர் கோயிலும் இங்கு உள்ள பெருங்கோயில்கள்.

பிரான்மலையில் பாண்டிநாட்டு மடம் என்றொரு மடம் இருந்தது. அது ஒரு காலத்தில் -
பாண்டியர்கள் காலத்தில் கோளகி மடம் என்று அழைக்கப்பட்டது. 'லக்ஷ்யாத்யாயி சந்தானம்' என்னும் கொடிவழியைச் சேர்ந்த சிவாச்சாரியார்களின் மடமாக இருந்தது. அதன் தலைமைப் பீடத்தில்
'பாண்டிநாட்டு முதலியார்' என்று குறிப்பிடப்பட்ட 'ஈசான்ய சிவாச்சாரியார்' என்பவர் இருந்தார்.
பரம்பரை பரம்பரையாகக் கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்கும் முன்பு இருந்து அவர்களின் மடம் இருந்தது.
அந்த மடத்தின் மேற்பார்வையில்தான் பிரான்மலையில் உள்ள திருக்கொடுங்குன்றீசர் கோயிலும் மங்கைநாயகர் கோயிலும் ஒரு காலத்தில் இருந்தன.
அருவியூர் நகரத்தார் என்னும் வைசியப் பிரிவினருக்கு இவர்கள்தாம் குருபீடமாக விளங்கினார்கள்.
1972-ஆம் ஆண்டில் அதில் சுப்பிரமணிய தேசிகர் என்பவர் பாண்டிநாட்டு குருக்களாக இருந்தார்.
1972-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒருமுறை பாண்டிநாட்டு குருக்களைச் சந்தித்தபோது, அவர் பேச்சு வாக்கில், "மலையில் குறிஞ்சி பூத்திருக்கிறது" என்று சொன்னார்.
ஆகவே குறிஞ்சியைத் தேடிப் போனேன்.
பிரான்மலையின் வடகிழக்குப் பகுதியில் ஒரு வளைந்த சரிவு உண்டு. மலையின் அமைப்பாலும், அருகில் பெரும் சுவர்போலிருந்த இருந்த சிறு குன்றுகளாலும், அதற்கும் வடமேற்கே இருந்த வாணாதிராயன் குன்று, எசறிவிழுந்தான் மலை ஆகியவற்றின் காரணத்தாலும் அந்தச் சரிவில் சூரிய வெளிச்சம் ஒரு நாளில் குறைவான நேரமே விழும்.
மிகவும் குளுமையாக இருக்கும். ஏறு வெய்யிலே படாது. உச்சிவேளைக்குப் பின்னர் வெய்யில் சிறிது நேரமே படும். அதன் பின்னர் மற்ற மலைகளும் குன்றுகளும் வெய்யிலை மறைத்துவிடும்.
அந்தச் சரிவின் வழியாக பிரான்மலையில் ஓடும் சிற்றருவியான வெள்ளக் கால்வாயின் மூன்று கால்கள் ஓடிவரும்.
சங்க இலக்கியத்தில் "பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல், பறந்தோங்கு சிறப்பில் பாரி", என்று காணப்படும் வெள்ளருவிதான் தற்காலத்து வெள்ளக் கால்வாய்.
அந்தச் சரிவின் கீழ், வெள்ளக்கால்வாயின் அருகில், கருங்குன்று என்றொரு சிறு குன்று உண்டு. அதன் அருகில்தான் பாரி வள்ளல் முல்லைக் கொடிக்குத் தேர் ஈந்தார் என்று கர்ணபரம்பரைக் கதை கூறும்.
கருங்குன்று அருகில் 'முதுமக்கள் தாழி' என்னும் ஈமப் பாண்டங்கள் புதைக்கப் பட்டிருக்கின்றன. அங்கு கருங்குன்றுப் பட்டினம் என்னும் ஊர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் - காராளன் காலத்தில் - இருந்ததாகவும் சொல்வார்கள்.
இந்தச் சரிவின்மீது குறிஞ்சியைத் தேடிப் போனேன்.
சிரமப்பட்டு செடிகளைக் கண்டுவிட்டேன்.
பூத்துக் குலுங்கியது.
"இதுதானா குறிஞ்சி மலர்?" என்ற கேள்வி எழுந்தது.
எப்படி அதை நிச்சயப்படுத்துவது?
வழி தோன்றவில்லை.
மலையை விட்டு இறங்கினேன்.
சில நாட்கள் கழித்து கேமெராவுடன் சரிவுக்குச் சென்றேன். கையில் ஒரு ·பிளாஸ்க்கில்
ஐஸ் கட்டியை உடைத்துப் போட்டுக் கொண்டு சென்றேன்.
மலைச்சரிவிலேயே மிகவும் குளுமையான இடத்தில் செடிகள் பெரிது பெரிதாக வளர்ந்திருந்தன.
அந்த செடிகளில் குறிஞ்சிப் பூக்கள் கொத்துக் கொத்தாக இருந்தன. பூக்களும்கூட பெரிதாக இருந்தன.
அவற்றை in situ -செடியில் இருந்த வண்ணம் என்னுடைய மினோல்ட்டா 2.4 கேமெராவால்
படங்கள் எடுத்துக்கொண்டேன்.
அத்துடன் நல்ல பால் காகிதத்தில் 6-B பென்ஸிலால் மலர்களைக் கொத்தோடு படமாக வரைந்துகொண்டேன்.
பின்னர் பூக்களைக் காம்பு, தண்டுடன் பறித்துக் கொண்டேன்.
·ப்லாஸ்க்கில் இருந்து  ஐஸ்கட்டிகள் சிலவற்றை வெளியில் எடுத்துவிட்டு, குறிஞ்சி மலர்களை உள்ளுக்குள் வைத்து, ·ப்லாஸ்க்கை இறுக மூடிவிட்டேன்.
சட்டையைக் கழற்றி, உள்பனியனையும் கழற்றினேன். குடிக்க வைத்திருந்த தண்ணீரில் பனியனை நன்கு நனைத்து, பனியனில் காம்பு-தண்டுடன் கூடிய பூங்கொத்துக்களை வைத்தேன்.
ஐஸ் கட்டிகளை நிரவி வைத்து, பனியனை மலர்க் கொத்துக்களுடன் சுருட்டினேன். அதன்மேல் ஐஸ் தண்ணீரைத் தெளித்துவிட்டேன்.
சட்டையை மாட்டிக்கொண்டு ஓட்ட ஓட்டமாக மலைச்சரிவிலிருந்து இறங்கினேன். பின்னர் அங்கிருந்து ஊர்வரைக்கும் ஓடினேன்.
ஊருக்குள் வெகுவேகமாக நுழைந்து, அங்கிருந்து சிங்கம்புணரிக்குச் சென்று, மதுரைக்குப்
போகும் பஸ்ஸைப் பிடித்து மதுரைக்குச் சென்றேன்.
வைகைப் பாலத்தைத் தாண்டி ஊருக்குள் நுழைந்ததும் முதல் ஸ்டாப் வெத்தலைப் பேட்டைதான்.
அங்கு இறங்கி, சைக்கிள் ரிக்ஷாவைப் பிடித்துக்கொண்டு நேராக மேல மாசி வீதி-
தெற்கு மாசி வீதி முனங்கில் இருக்கும் டாக்டர் ஏவி ஜெயச்சந்திரனுடைய ஆ·பீஸ¤க்குச் சென்றேன்.
அவர் மதுரை மாவட்டத் தகவல் இலாக்கா அதிகாரியாக இருந்தார். பெரும் மேதை.
பிரபலமான ஆராய்ச்சியாளர். பன்மொழி வல்லுனர். பல்கலை வித்தகர்.
அவரிடம் ·பிலாஸ்க்கைத் திறந்து குறிஞ்சி மலரை எடுத்துக்காட்டினேன். பனியன் சுருளிலிருந்து இலை, தண்டு, காம்புடன் இருந்த மலர்க் கொத்துக்களையும் காட்டினேன். கையால் வரைந்திருந்த படத்தையும் காட்டினேன்.
"Yes. This is Kurinji. No doubt about it", என்றார்.
உடனேயே ஹிந்து, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், தினமலர் ஆகிய நிருபர்களை டெலி·போனில் அழைத்தார்.
அவர்களும் வந்தனர்.
அத்தனைப் பத்திரிக்கைகளும் "பிரான்மலையிலும் குறிஞ்சி மலர்" என்னும் செய்தியைத்
தாங்கி வந்தன.
திருச்சி வானொலியில் இருந்த செல்வம் என்பவர் என்னை 'பெட்டகம்' என்னும் பகுதியில் 'பிரான்மலையில் குறிஞ்சி' என்பதைப் பற்றி பேசச் சொன்னார். பேசினேன்.
இப்படியாகத்தான் பிரான்மலைக் குறிஞ்சி உலகப்புகழ் பெற்றது.